திருத்தணி TVK வேட்பாளர் சத்யகுமார் தனிப் பிரச்சாரம்:
தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்த நிலையில், திருத்தணி தொகுதியில் அது விசித்திரமான முறையில் அரங்கேறி வருகிறது. அங்கு போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் சத்யகுமார், ஒரு ஆதரவாளர் கூட இன்றி வீதிகளில் தனி ஆளாகப் பிரச்சாரம் செய்து வருவது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

பொதுவாகக் கட்சிகளில் நீண்டகாலம் உழைத்தவர்கள் அல்லது செல்வாக்கு மிக்கவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி வாய்ப்பு பெறுபவர்களால் தேர்தல் களம் சோபையிழப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. திருத்தணியில் சத்யகுமார் எவ்வித பிரச்சார வாகனமும் இன்றி, நிர்வாகிகளை ‘மிதிவண்டியில்’ வருமாறு அழைத்ததே இந்தத் தனிமைக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
“பிரச்சார வாகனத்திற்குப் பதில் சைக்கிளில் வரச் சொல்கிறார்; வெறும் 13 பேர் இருந்தால் போதும் என்கிறார். வீடியோ எடுத்தால் மட்டும் வாக்குகள் கிடைத்துவிடுமா?” என உள்ளூர் நிர்வாகிகள் குமுறுகின்றனர். மேலும், கட்சி நிர்வாகிகளை இழிவாகப் பேசுவதாகவும், அவர்கள் மீது அவதூறு பரப்புவதாகவும் வேட்பாளர் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் “அவருக்காக 100 சதவீதம் பணியாற்ற மாட்டோம்” என நிர்வாகிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் திருத்தணியில் TVK-வின் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.





