சர்ப்ரைஸ் என ஏமாற்றிக் கொலை; பெங்களூருவில் காதலன் கிரணை எரித்துக் கொன்ற பிரேமா போலீசில் சிக்கினார்:
பெங்களூரு: காதலன் மீது கொண்ட அதீத கோபத்தால், அவருக்கு ஆச்சரியம் கொடுக்கப் போவதாகக் கூறி நாற்காலியில் கட்டி வைத்து காதலியே தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திட்டமிட்ட கொலை:
பெங்களூரு அஞ்சனபுரா பகுதியைச் சேர்ந்த கிரண் (27) மற்றும் பிரேமா (27) ஆகிய இருவரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். சமீபகாலமாக கிரண் தன்னைத் தவிர்ப்பதாக எண்ணிய பிரேமா, அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து கிரணைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.
மேற்கத்திய பாணி என ஏமாற்றம்:
வீட்டிற்கு வந்த கிரணிடம், “உனக்கு ஒரு மேற்கத்திய பாணி காதல் சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறேன்” என்று ஆசையாகக் கூறி, கிரணின் கண்களைக் கட்டி நாற்காலியில் அமர வைத்துள்ளார். பின்னர், அவர் தப்பிக்க முடியாதபடி கயிற்றால் நாற்காலியுடன் சேர்த்து இறுக்கமாகக் கட்டியுள்ளார். காதலியின் பேச்சை முழுமையாக நம்பிய கிரணும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.
மண்ணெண்ணெய் ஊற்றி எரிப்பு:
கிரணைப் பிணைத்த பிறகு, தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி பிரேமா தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி கிரண் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் பிரேமாவைக் கைது செய்தனர்.
விசாரணையில் பகீர் வாக்குமூலம்:
போலீஸ் விசாரணையில், “கிரண் என்னிடம் சரியாகப் பேசுவதில்லை, என்னைச் சந்திப்பதைத் தவிர்க்கிறார். அவர் என்னைத் திருமணம் செய்ய மாட்டார் என்ற சந்தேகம் வந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்தேன்” என பிரேமா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
