Home செய்திகள் சித்தலூர் தர்கா வக்பு சொத்தைப் பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்க! வக்பு வாரியத்திற்கு மமக மாவட்டத்...

சித்தலூர் தர்கா வக்பு சொத்தைப் பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்க! வக்பு வாரியத்திற்கு மமக மாவட்டத் தலைவர் பசல் முஹம்மது கோரிக்கை!

0
சித்தலூர் தர்கா வக்பு சொத்தைப் பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்க! வக்பு வாரியத்திற்கு மமக மாவட்டத் தலைவர் பசல் முஹம்மது கோரிக்கை!

 

சித்தலூர் தர்கா வக்பு சொத்தை பாதுகாக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் – தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஏ. பசல் முஹம்மது கோரிக்கை

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் கிராமத்தில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள GS.176/1959, வக்பு சர்வே எண் 12-இல் அமைந்துள்ள 17 ஏக்கர் 88 சென்ட் பரப்பளவு கொண்ட சித்தலூர் தர்கா வக்பு சொத்தை பாதுகாக்க உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் ஏ. பசல் முஹம்மது அவர்கள் தமிழ்நாடு வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலருக்கு மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில், சித்தலூர் தர்காவிற்கு சொந்தமான வக்பு நிலத்தில் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அந்த நிலம் கடந்த 2017-ஆம் ஆண்டு புறம்போக்கு நிலமாக வகைமாற்றம் செய்யப்பட்டு, சப்-டிவிஷன் செய்யப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 10.06.2026 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் அனுப்பிய பதிலில், 2017-ஆம் ஆண்டு நிலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டபோது W.P. No.27174/2017 என்ற வழக்கை சிராஜுதீன் என்பவர் தாக்கல் செய்திருந்தாலும், நடைமுறை காரணங்களால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் வக்பு வாரியத்தின் சார்பில் எந்தவித சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், தற்போது மேலும் அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதுடன், நவாப் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பாராங்கற் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் இடிக்கப்பட்டுள்ளதாக மனுவில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வக்பு சொத்தின் உரிமையையும் வரலாற்று முக்கியத்துவத்தையும் பாதுகாக்க தமிழ்நாடு வக்பு வாரியம் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அணுகி, தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

மேலும், இதே வட்டத்தில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்கி வருவதற்காக அரசால் அந்தக் கோயிலுக்கு உரிய வாடகை செலுத்தப்பட்டு வருவதாகவும், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் அதை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால், வக்பு சொத்துகள் மட்டும் உரிய சட்ட நடைமுறைகள் மற்றும் வக்பு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் வகைமாற்றம் செய்யப்பட்டு அரசு பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுவது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துவதாகவும், வக்பு சொத்துகளை பாதுகாக்க தமிழ்நாடு வக்பு வாரியம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏ. பசல் முஹம்மது வலியுறுத்தியுள்ளார்..(திருக்கோவிலூர் செய்தியாளர் முத்துக்குமரன்).

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version