பாலக்கோடு அருகே 75 அடி கிணற்றில்:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்து ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையோரத்தில் இருந்த சுமார் 75 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் சொகுசு கார் ஒன்று தவறி விழுந்தது. அதில் பயணம் செய்த குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 55 வயதான நபர் தனது மனைவி, மகன் மற்றும் பேத்தியுடன் திருச்சியில் நடைபெற்ற குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் பெங்களூரு நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
பாலக்கோடு அருகே கொலசனஅள்ளி பகுதியில் சென்றபோது, ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, சாலையோரத்தில் இருந்த ஆழமான கிணற்றுக்குள் கார் பாய்ந்தது.
ஆனால், கார் நேரடியாக தண்ணீரில் மூழ்காமல், கிணற்றின் பாதியில் உள்ள கரையில் சிக்கி தொங்கியதால் மிகப்பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சம்பவத்தின் போது எழுந்த சத்தத்தை கேட்ட கிணற்றின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கிணற்றில் இறங்கி காரில் இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர்.
தகவல் கிடைத்தவுடன் தேசிய நெடுஞ்சாலை மீட்புக்குழுவினரும், பாலக்கோடு போலீசாரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் கிரேன் உதவியுடன் காரை மேலே எடுத்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



