ராணிப்பேட்டை திமுகவில் அதிரடி மாற்றம்:
ராணிப்பேட்டை:
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ராணிப்பேட்டை தொகுதியில் நிலவி வந்த திமுக வேட்பாளர் குறித்த இழுபறிக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வினோத் காந்திக்குப் பதிலாக, அவரது தந்தை அமைச்சர் ஆர். காந்தி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
நடந்தது என்ன? திமுக தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் ராணிப்பேட்டை தொகுதிக்கு அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி பெயர் இடம்பெற்றிருந்தது. ஆனால், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அமைச்சர் காந்தி ஆர்வம் காட்டியதால், தந்தை – மகன் இடையே ஒரு சிறிய ‘பஞ்சாயத்து’ நிலவியது. இதனால் வினோத் காந்தி மனுத்தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

மகனின் நெகிழ்ச்சியான முடிவு:
இந்நிலையில், தனது தந்தையின் விருப்பத்திற்கு மதிப்பளித்து வேட்பாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வினோத் காந்தி அறிவித்தார். இது குறித்து அவர் தனது முகநூல் பதிவில், “எனக்கு வாய்ப்பளித்த தலைவர் ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி. தந்தையின் உறுதியான விருப்பத்தைக் கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பை அவரிடமே ஒப்படைக்கிறேன். எனக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால் எதிர்காலத்தில் மக்கள் பணியாற்றுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் காந்தி விளக்கம்:
இன்று தனது ஆதரவாளர்களுடன் வந்து வேட்புமனுவைத் தாக்கல் செய்த அமைச்சர் ஆர். காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தலைவர் ஸ்டாலினின் முழு ஒப்புதலுடன்தான் நான் மனுத்தாக்கல் செய்துள்ளேன். எனக்கும் என் மகனுக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை. இருவரும் இணைந்தே இங்கு வந்துள்ளோம்” என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ராணிப்பேட்டையில் திமுகவின் இந்த அதிரடி மாற்றம் அக்கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



