பிரிட்டன் கடற்கரைகளில் கரை ஒதுங்கும் விசித்திர உயிரினங்கள்! வேற்றுலக உயிரினங்களா? விஞ்ஞானிகள் விளக்கம்!
லண்டன்: பிரிட்டனின் முக்கியக் கடற்கரைப் பகுதிகளில் நீல நிறத்தில் விசித்திர தோற்றமுடைய நூற்றுக்கணக்கான உயிரினங்கள் கரை ஒதுங்கி வருவது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடற்கரையில் கரை ஒதுங்கிய ‘By-the-Wind Sailors’: பிரிட்டனில் உள்ள கம்ப்ரியா மற்றும் வேல்ஸ் கடற்கரைப் பகுதிகளில் அடர் நீல நிறத்தில், பார்ப்பதற்கு வேற்றுலக உயிரினங்கள் (Alien-like) போலக் காட்சியளிக்கும் உயிரினங்கள் திரளாகக் கரை ஒதுங்கியுள்ளன.
ஆராய்ச்சியாளர்கள் இது குறித்துக் கூறுகையில், “இவை அறிவியல் ரீதியாக ‘வெலல்லா வெலல்லா’ (Velella velella) அல்லது ‘பை-தி-விண்ட் சைலர்ஸ்’ (By-the-Wind Sailors) என்று அழைக்கப்படும் கடல் வாழ் உயிரினங்கள் ஆகும். இவை பார்ப்பதற்கு ஜெல்லிமீன் போலத் தோன்றினாலும், ஜெல்லிமீன்கள் அல்ல. ஆபத்தான ‘போர்த்துகீசிய மேன்-ஓ-வார்’ (Man o’ War) உயிரின வகையைச் சேர்ந்தவை” எனத் தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன? பேரழிவின் அறிகுறியா? பொதுவாக வெப்பமண்டலக் கடல் பகுதிகளில் வாழும் இந்த உயிரினங்கள் பிரிட்டன் போன்ற குளிர்ந்த கடல் பகுதிக்கு வரக் காரணம், அங்கு நிலவும் கடுமையான வெப்ப அலைதான் (Heatwave). வழக்கத்திற்கு மாறாகப் பிரிட்டனில் வெப்பநிலை 35°C வரை உயர்ந்ததால் கடல் நீர் வெப்பமடைந்து, வலுவான காற்று மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக இவை கடற்கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளன.
இவற்றால் தாமாக நீந்த முடியாது என்பதால் காற்றின் திசையிலேயே மிதந்து செல்லும். பொதுமக்கள் இதைக் கண்டு பேரழிவின் அறிகுறி என அஞ்சத் தேவையில்லை; இருப்பினும், இவற்றை வெறும் கையால் தொட்டால் கடுமையான எரிச்சலும் வலியும் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
