20 ஆண்டுக்காலக் காத்திருப்பு… 41 வயதில் உலகக் கோப்பை கோல் வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த ரொனால்டோ!
வாஷிங்டன்: போர்ச்சுகீசிய ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது விளையாட்டு வாழ்க்கையில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்திருந்தாலும், ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுகளில் ஒரு கோல் கூட அடிக்காதது அவரது சாதனையில் ஒரு பெரும் குறையாகவே இருந்தது. நேற்று இரவு, அந்தக்குறையைப் போக்கி ரொனால்டோ புதிய வரலாறு படைத்துள்ளார்.
விறுவிறுப்பான நாக்-அவுட் சுற்று: ஃபிஃபா உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்று (Round of 32) தற்போது மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில், போர்ச்சுகல் அணி வலிமையான குரோஷிய அணியை எதிர்கொண்டது. குரோஷியா ஏற்கனவே 2018 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வலிமையான அணியாகும். மேலும், அந்த அணியின் ஜாம்பவான் வீரரான லூகா மோட்ரிச்சின் கடைசி உலகக் கோப்பைத் தொடராக இது அமைந்துள்ளது.
இதனால், போர்ச்சுகல் அணியால் குரோஷியாவைச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. எதிர்பார்ப்பை மெய்ப்பிக்கும் வகையில், ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிச் முதல் கோலை அடித்து தன் அணியை முன்னிலைப்படுத்தினார்.
வரலாறு படைத்த சிஆர்7 (CR7): குரோஷியா முன்னிலையில் இருந்த நிலையில், 68-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணிக்கு ஒரு பெனால்டி (Penalty) வாய்ப்பு கிடைத்தது. பெனால்டி நிபுணரான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்கி, பந்தை மிக லாவகமாக வலைக்குள் தள்ளி அதை வெற்றிகரமாக கோலாக மாற்றினார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டிகளில் விளையாடியும் கோல் அடிக்காத நிலையில், இந்தத் தருணம் ரொனால்டோவுக்கும், அவரது சக வீரர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் மிகுந்த உணர்ச்சிகரமானதாக அமைந்தது. இந்தக் கோலின் மூலம், இரண்டு தசாப்தங்களாக அவரைத் துரத்திய விமர்சனங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம், 41 வயதில் உலகக் கோப்பை நாக்-அவுட் ஆட்டத்தில் கோல் அடித்த மிக மூத்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ரொனால்டோ படைத்தார்.
போர்ச்சுகல் த்ரில் வெற்றி: அதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தில் (stoppage time) போர்ச்சுகல் அணி மற்றொரு கோல் அடித்ததன் மூலம் 2–1 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் கடைசி வினாடிகளில் குரோஷியாவின் ஜோஸ்கோ க்வார்டியோல் கோல் அடித்து சமன் செய்தது போல் கொண்டாடினார்; ஆனால் VAR ஆய்வுக்குப் பிறகு அது ‘ஆஃப்-சைட்’ (offside) என அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது குரோஷிய ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தது. 81-வது நிமிடத்தில் ரொனால்டோ சப்ஸ்டிடியூட் செய்யப்பட்டு வெளியேறினாலும், போர்ச்சுகலின் இந்த வரலாற்று வெற்றிக்கு அவரது பெனால்டி கோல் மிக முக்கியப் பங்காற்றியது. இதன் விளைவாக, சமூக ஊடகங்களில் ரொனால்டோவின் ரசிகர்கள் இந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
