வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள திருமலைச்சேரி மற்றும் புதுப்பாடி கிராமங்களின் அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்..
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள திருமலைச்சேரி மற்றும் புதுப்பாடி கிராமங்களின் அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு 5.200.66 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பாலாறு அணைக்கட்டில் குத்து விளக்கேற்றி வைத்து. பார்வையிட்டார்.
பாலாறு அணைக்கட்டானது பாலாறு ஆற்றின் குறுக்கே 244 கி.மீட்டரில் வாலாஜா வட்டம் திருமலைச்சேரி மற்றும் ஆற்காடு வட்டம் புதுப்பாடி ஆகிய கிராமங்களுக்கிடையே 1858-ஆம் ஆண்டு அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டானது 801 மீட்டர் நீளமும், 3.10 மீட்டர் உயரமும் கொண்டதாகவும், ஆண்டிற்கு 150 மி.கன அடி நீரினை தேக்கி வைக்கும் வகையிலும், அதிகப்படியாக வினாடிக்கு 1,75,000 க.அடி வெள்ளநீர் வெளியேறும் வகையிலும், இரு புறங்களிலும் 39 மணற்போக்கிகள் மற்றும் 84.26 கி.மீ நீளம் கொண்ட 4 பிரதான கால்வாய்கள் வழியாக ஒரே நேரத்தில் வினாடிக்கு 6124 கன அடி தண்ணீர் திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணைக்கட்டு புனரமைக்கும் பணிக்கு மாநில நீர்வளத்துறை அமைச்சர் அவர்களால் 31.01.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 20.02.2026 அன்றுடன் பணி முழுமையாக முடிக்கப்பட்டது. மேலும் இந்த 4 அணைக்கட்டிலிருந்து செல்லும் பிரதான கால்வாய்களின் மூலம் இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்லூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சார்ந்த வேகவதி, செய்யாறு, கீழ்பாலாறு. கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு ஆகிய உபவடிநிலங்களில் உள்ள 319 ஏரிகளுக்கு நீர் வழங்கி அதன் மூலம் சுமார் 77510.65 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசன வசதி பெறும். மேற்கண்ட ஏரிகளின் மொத்த கொள்ளளவு 10 டி.எம்.சி ஆகும். இந்த அணைக்கட்டு புனரமைத்ததின் மூலம் 4 மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 4,25,000 மக்கள் பயன் பெறுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.வெங்கடேஷன், உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.



