சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் குறித்து, முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவரும் சமூகப் போராளியுமான முனைவர் ச.சு. ஜைனுதீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆதரவுக்கு வரவேற்பு: தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கி வந்துள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்துள்ள முடிவை முஸ்லிம் மக்கள் கழகம் மனதார வரவேற்கிறது. சனாதன சக்திகளின் திட்டங்களைத் தவிடு பொடியாக்குவதற்கு இது ஒரு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளதாக ஜைனுதீன் குறிப்பிட்டுள்ளார்.

விசிக மற்றும் இடதுசாரிகளுக்கு அழைப்பு: தேர்தல் முடிவுகளின்படி தமிழக வெற்றி கழகத்திற்கு 108 இடங்கள் கிடைத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இடதுசாரி கட்சிகள் விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதில் தவறில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக நலனே முக்கியம்: தமிழகத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுக்கும் விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள், தற்போது நிலவும் அரசியல் சூழலில் தமிழகத்தையும் மக்களையும் காப்பாற்றுவதை முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும். அரசியலில் மக்கள் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்த, தொல். திருமாவளவன் அவர்கள் இடதுசாரி கட்சிகளை ஒருங்கிணைத்து, விஜய் அவர்கள் முதல்வராக ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே முஸ்லிம் மக்கள் கழகத்தின் எண்ணமாகும்.

தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை உருவாக்கத் துடிக்கும் இந்த முடிவை முஸ்லிம் மக்கள் கழகம் முழுமையாக வரவேற்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.