புது தில்லி: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாகத் தொடரப்பட்ட ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் மிகவும் முக்கியமான சட்ட மற்றும் சமூகக் கேள்விகளை முன்வைத்துள்ளது. 15 ஆண்டுகள் ஒருவருடன் இணைந்து வாழ்ந்த பிறகு, அவர் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டைச் சுமத்துவது எவ்வகையில் நியாயம் என நீதிமன்றம் வினவியுள்ளது.

வழக்கின் விவரம்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது இளம் வயதிலேயே கணவரை இழந்தவர். தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து, ஒரு நபர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி 15 ஆண்டுகளாக ‘லிவ்-இன்’ உறவில் இருந்துள்ளார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தற்போது அந்த நபர் தன்னைப் பிரிந்து சென்றதால், அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் அந்தப் பெண்.

இந்த வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்திருந்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதிகளின் கருத்து: நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. விசாரணையின் போது நீதிபதி நாகரத்னா குறிப்பிட்டதாவது:

  • பரஸ்பர சம்மதத்துடன் 15 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து, ஒரு குழந்தையும் இருக்கும்போது, இப்போது பாலியல் புகார் அளிப்பதில் நியாயம் இல்லை.

  • சட்டப்பூர்வத் திருமணம் இல்லாத உறவுகளில் இத்தகைய பிரிவுகள் ஏற்படுவது ஒரு ஆபத்தான அம்சம்.

  • ஒருவர் உங்களை விட்டுச் சென்றார் என்பதற்காக மட்டுமே அது கிரிமினல் குற்றமாகிவிடாது.

  • முறைப்படி திருமணம் நடந்திருந்தால் ஜீவனாம்சம் கோர முடியும், ஆனால் இதுபோன்ற உறவுகளில் குழந்தைக்குத் தேவையான நிதியுதவியைப் பெற்றுத்தர நீதிமன்றம் முயலும்.

இந்த விவகாரத்தில் மே 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.