கண் பார்வைக்கு ஏற்ற சத்தான கேரட் சட்னி: இட்லி, தோசைக்கு அசத்தலான ரெசிபி!

சென்னை: காய்கறிகளைச் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்குக் கேரட்டை சத்தான முறையில் செய்துகொடுக்க அருமையான தீர்வு கேரட் சட்னி. வழக்கமான தேங்காய் சட்னிக்கு மாற்றாக, வைட்டமின் ‘ஏ’ மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த இந்த சட்னி காலை உணவை மேலும் சுவையாக்கும்.
கேரட்டின் லேசான இனிப்புச் சுவையோடு, தக்காளி மற்றும் புளியின் புளிப்புச் சுவை சேர்ந்து இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பணியாரத்திற்குப் பிரமாதமான தொட்டுக்கொள்ளும் உணவாக அமைகிறது.
🛒 தேவையான பொருட்கள்:
-
கேரட் – 2 (பெரியது)
-
பெரிய வெங்காயம் – 1
-
தக்காளி – 1
-
காய்ந்த மிளகாய் – 3 முதல் 4 (காரத்திற்கு ஏற்ப)
-
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
-
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
-
பூண்டு – 3 பற்கள்
-
இஞ்சி – சிறிய துண்டு
-
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
-
எண்ணெய் & உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
-
கடுகு & உளுத்தம் பருப்பு – தலா 1/2 தேக்கரண்டி
-
கறிவேப்பிலை – 1 கொத்து
-
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
🍳 செய்முறை விளக்கம்:
-
பருப்புகள் வறுத்தல்: வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும்.
-
காய்கறி வதக்கல்: அதனுடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
-
கேரட் சேர்த்தல்: நறுக்கிய கேரட் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும். கேரட் மென்மையானதும் புளி மற்றும் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
-
அரைத்தல் & தாளிப்பு: கலவை ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் மாற்றித் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்துச் சட்னியில் கொட்டினால் சுவையான கேரட் சட்னி தயார்!



