வில்லிவாக்கம் தேர்தல் 2026
சென்னை: தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைவரின் பார்வையும் இப்போது சென்னை வில்லிவாக்கம் தொகுதியின் பக்கம் திரும்பியுள்ளது. அண்ணா நகர் எம்.எல்.ஏ எம்.கே. மோகனின் மகன் கார்த்திக் மோகனை வில்லிவாக்கத்தில் களம் இறக்கி, தி.மு.க தலைமை ஒரு மிகப்பெரிய அரசியல் காயை நகர்த்தியுள்ளது.
மாறிய களம்… மாறாத வேகம்!
கடந்த சில ஆண்டுகளாக அண்ணா நகர் தொகுதியிலேயே தனது அரசியல் வேர்களை ஆழமாகப் பதித்து வந்த கார்த்திக் மோகன், கடைசி நேரத்தில் வில்லிவாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. “அண்ணா நகரில் உழைத்தால் வில்லிவாக்கத்தில் சீட்” என்கிற புதிய ஃபார்முலா இப்போது தி.மு.க-வினரிடையே விவாதப் பொருளாகியுள்ளது. வில்லிவாக்கம் என்பது ஒரு வகையில் ‘குட்டி அண்ணா நகர்’ போன்றது என்பதால், அங்குள்ள மக்கள் செல்வாக்கை அறுவடை செய்ய கார்த்திக் மோகன் தயாராகி வருகிறார்.
ஆதவ் அர்ஜுனா – ஒரு பலமான எதிராளி?
கார்த்திக் மோகனுக்கு சவாலாக அமையப்போவது தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் ஆதவ் அர்ஜுனா. ஒருபுறம் தி.மு.க-வின் அசைக்க முடியாத கட்டமைப்பு மற்றும் கார்த்திக் மோகனின் தேர்தல் வியூகம் என்றால், மறுபுறம் ஆதவ் அர்ஜுனாவின் இளமை துடிப்பு மற்றும் மக்கள் தொடர்புத் திறன் என களம் சமபலத்துடன் காட்சியளிக்கிறது.

அ.தி.மு.க-வின் ‘சைலண்ட்’ கேம் : இந்த இருமுனைப் போட்டிக்கு நடுவே, அ.தி.மு.க-வின் விஜயகுமார் ஒரு ‘வைல்ட் கார்டு’ போல அமைதியாகக் களம் காண்கிறார். வில்லிவாக்கம் தொகுதியின் வரலாறு எப்போதும் ஆளுங்கட்சிக்கு மட்டுமே சாதகமாக இருந்ததில்லை. அ.தி.மு.க இங்கு பலமுறை வெற்றிக் கனியைப் பறித்துள்ளது. அ.தி.மு.க பிரிக்கும் வாக்குகள் தி.மு.க-வின் வெற்றியைப் பாதிக்குமா அல்லது த.வெ.க-வின் எழுச்சியைத் தடுக்குமா என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
அண்ணா நகர் மண்ணில் கார்த்திக் மோகன் விதைத்த உழைப்பு, அண்டை தொகுதியான வில்லிவாக்கத்தில் அவருக்கு வெற்றியைத் தேடித்தருமா? ‘வியூகம்’ வெல்லுமா அல்லது ‘மக்கள் தொடர்பு’ வெல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!



