Home செய்திகள் சிறுநீரக மோசடி: இதில் ஈடுபட்ட மருத்துவர்கள் யார்? அமைச்சர் அருண்ராஜ் வெளியிடும் பரபரப்புத் தகவல்கள்!

சிறுநீரக மோசடி: இதில் ஈடுபட்ட மருத்துவர்கள் யார்? அமைச்சர் அருண்ராஜ் வெளியிடும் பரபரப்புத் தகவல்கள்!

0
சிறுநீரக மோசடி: இதில் ஈடுபட்ட மருத்துவர்கள் யார்? அமைச்சர் அருண்ராஜ் வெளியிடும் பரபரப்புத் தகவல்கள்!

 

சென்னை: தமிழகத்தையே உலுக்கிய சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் பற்றிய விவரங்கள் மிக விரைவில் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மோசடி நடந்தது எப்படி? விபத்துகள் அல்லது நாள்பட்ட நோய்கள் காரணமாக மூளைச்சாவு அடைபவர்களின் உறுப்புகள், மாநில உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் காத்திருப்புப் பட்டியலின் படி தானமாக வழங்கப்படுகின்றன. மேலும், உயிருடன் இருப்பவர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தங்கள் ரத்த உறவுகளுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக தானம் செய்ய சட்டத்தில் இடமுண்டு.

இந்த நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்திய இடைத்தரகர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஏழை எளிய மக்களுக்குப் பண ஆசை காட்டிப் போலி ஆவணங்கள் மூலம் நோயாளிகளுடன் ரத்த உறவு இருப்பதாகக் கூறி சிறுநீரகங்களை முறைகேடாகப் பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வெளிச்சத்திற்கு வந்த இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விசாரணை அறிக்கையும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்: இவ்விவகாரம் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் வினீத் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழு அளிக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில்:

  • உரிமம் ரத்து: திருச்சியில் உள்ள சித்தார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

  • மகாராஷ்டிரா தொடர்பு: மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழை விவசாயிகளையும் தமிழக இடைத்தரகர்கள் மற்றும் சில மருத்துவர்கள் குறிவைத்து இந்த மோசடியில் ஈடுபடுத்தியது மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் கூடுதல் இயக்குநர் தலைமையிலான விசாரணையில் கண்டறியப்பட்டது.

நீதிமன்ற வழக்கு & அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இவ்வழக்கின் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்:

“சிறுநீரக மோசடியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்ட மருத்துவர்களின் விவரங்களை விசாரணைக்குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இதில் தொடர்புடைய அனைவரின் பெயர்களும் விரைவில் முறைப்படி வெளிப்படையாக அறிவிக்கப்படும்.”

என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் குற்றச் செயலில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் பின்னணியில் இருந்த இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version