விஜய் கார் கண்ணாடியைக் கூட இறக்கவில்லை:
சென்னை: தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவேகா) கட்சியில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா அக்னெல், அக்கட்சியிலிருந்து விலகி இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜிதா அக்னெல், விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

“அவமானம் மட்டுமே மிஞ்சியது”
செய்தியாளர் சந்திப்பில் அஜிதா அக்னெல் பேசியதாவது:
கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தவேகாவில் தீவிரமாகப் பணியாற்றினேன். விஜய்யின் அழைப்பால் எனது அரசு வேலையைக் கூடத் துறந்து கட்சிப் பணி செய்தேன். ஆனால் கட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்போ, அங்கீகாரமோ இல்லை. கல்வி விழாவின் போது விஜய் என்னிடம் பேசிக்கொண்டிருந்த நேரலையை வேண்டுமென்றே துண்டித்து எனக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார்கள்.”
புஸ்ஸி ஆனந்த் மீது குற்றச்சாட்டு:
கட்சியில் நடக்கும் அனைத்து குளறுபடிகளுக்கும் புஸ்ஸி ஆனந்த்தான் காரணம் என்று அஜிதா பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை என்றும், பதவி ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜய் காலில் விழுந்து அழுத சம்பவம்:
தொடர்ந்து பேசிய அவர், “ஒருமுறை விஜய் நடைப்பயிற்சி சென்றபோது அவரைச் சந்தித்து நீதி கேட்டு அவர் காலில் விழுந்து அழுதேன். ஆனால் அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. கடைசியாக அவரைச் சந்திக்க முயன்றபோது, அவர் தனது காரின் ஜன்னல் கண்ணாடியைக் கூட இறக்காமல் சென்றார். இது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. எனக்கு உயிருக்கு பயம் கூட ஏற்பட்டது” என உருக்கமாகத் தெரிவித்தார்.
திமுகவில் இணைந்தது ஏன்?
தனது சமூகத்தின் அடையாளத்திற்காகவும், மக்களுக்கு உண்மையாகச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இணைந்ததாக அவர் கூறினார். இனிவரும் காலங்களில் கடலோர கிராம மக்களின் உரிமைகளுக்காக திமுகவில் இருந்து பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
தேர்தல் நேரத்தில் தவேகா கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரே விஜய்க்கு எதிராகத் திரும்பிப் புகார் கூறியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



