பட்ஜெட்டில் வெடிக்கப்போகும் ஊழல் குண்டு! முந்தைய ஆட்சியின் பட்டியலை இறக்கத் தயாராகும் TVK அரசு!
சென்னை: ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், “கூட்டத்தொடரின் போது முந்தைய ஆட்சிக் காலத்தின் ஊழல் வழக்குகள் அடங்கிய பட்டியல் சமர்ப்பிக்கப்படும்” என்று தமிழக நிதியமைச்சர் மரியா வில்சன் அறிவித்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
‘அறம், பொருள், இன்பம்’ பாணியில் முதல் பட்ஜெட்!
தமிழகத்தில் முதன்முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள TVK (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிதியமைச்சர் மரியா வில்சன் தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் விஜய்யின் நேரடி வழிகாட்டுதலில் தயாராகும் இந்த பட்ஜெட், ‘அறம்’, ‘பொருள்’, ‘இன்பம்’ என்ற மூன்று முக்கிய பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளிக்கும் கல்வித்துறைக்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யவும், சாமானிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் புதிய திட்டங்களை வடிவமைக்கவும் முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
சுதந்திரமான தணிக்கை… வெளிவரப்போகும் பட்டியல்கள்!
செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் மரியா வில்சன், “முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் நடந்த நிதி முறைகேடுகளைச் சரிசெய்யும் வகையில் இந்த பட்ஜெட் அமையும். அரசுத் துறைகளில் நாங்கள் சுதந்திரமான தணிக்கை (Audit) நடத்தியுள்ளோம்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊழல் வழக்குகள் அடங்கிய முழுப் பட்டியலையும் சமர்ப்பிப்போம். துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ. ‘கட்சி நிதி என்ன ஆனது?’ என்று தொடர்ந்து கேட்டு வருகிறார். பட்டியல் வரும்போது அனைத்தின் உண்மையும் வெளிச்சத்திற்கு வரும்” என காரசாரமாகத் தெரிவித்தார்.
2029-ல் தேசிய அரசியல்… நீட் தேர்வு ரத்து?
தொடர்ந்து பேசிய அவர், “வருகிற 2029-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தைக் காண்பீர்கள். அப்போது நிச்சயம் நீட் (NEET) தேர்வு ரத்து செய்யப்படும்” என்று கூறினார். இதன் மூலம் TVK அரசு மாநில அரசியலைத் தாண்டி தேசிய அளவிலும் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதை அவர் சூசகமாக உணர்த்தியுள்ளார்.
