டிரம்ப்பின் அதிரடி உரை:
வாஷிங்டன்: உலக நாடுகளிடையே நிலவி வந்த அமைதி நம்பிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் சமீபத்திய உரை முற்றிலுமாகச் சிதைத்துள்ளது. ஈரானுக்கு எதிராக அடுத்த சில வாரங்களில் மிகக் கடுமையான இராணுவத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அவர் விடுத்துள்ள எச்சரிக்கை, சர்வதேச சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரம்ப்பின் ஆக்ரோஷமான எச்சரிக்கை:
வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க மக்களிடையே உரையாற்றிய டொனால்ட் டிரம்ப், “ஈரானை அவர்கள் இருக்க வேண்டிய இடமான கற்காலத்திற்கே திருப்பி அனுப்புவோம். அமெரிக்காவின் இலக்குகளை எட்டும் வரை எங்களது தாக்குதல் ஓயாது,” என அதிரடியாக அறிவித்தார். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் இந்த இராணுவ நடவடிக்கை தொடங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்குச்சந்தையில் பெரும் சரிவு: டிரம்ப்பின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆசியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. ஜப்பானின் நிக்கி (Nikkei) 1.83 சதவீதமும், ஹாங்காங் சந்தை 1.08 சதவீதமும் சரிந்தன. அமெரிக்கப் பங்கு எதிர்கால ஒப்பந்தங்களும் (Equity Futures) 1 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன.
கச்சா எண்ணெய் விலை உயர்வு:
போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் தடை ஏற்படும் என்ற அச்சத்தால் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 105 டாலருக்கும் அதிகமான விலையில் வர்த்தகமாகிறது. இது டிரம்ப்பின் உரைக்கு முன்னிருந்த விலையை விட சுமார் 4.2 சதவீதம் அதிகமாகும்.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் திருப்பம்:
பொதுவாகப் போர் பதற்ற காலங்களில் தங்கம் விலை உயரும். ஆனால், டிரம்ப்பின் உரையைத் தொடர்ந்து இன்று சந்தையில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. உடனடிச் சந்தையில் (Spot Market) தங்கம் விலை 1.25 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸ் 4,698.92 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளது. அதேபோல் வெள்ளி விலையும் 2.89 சதவீதம் சரிந்து $72.9075-க்கு வர்த்தகமாகிறது.
முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வந்த “அமைதி பேச்சுவார்த்தை” குறித்த நம்பிக்கையை டிரம்ப்பின் இந்த அதிரடி மாற்றங்கள் கேள்விக்குறியாக்கியுள்ளன. உலகப் பொருளாதாரம் மீண்டும் ஒரு நிலையற்ற சூழலை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.



