Monday, August 31, 2026
Homeசெய்திகள்"விஜய்க்குப் பதிலடியாகவே மார்க்கண்டேயன் பேசினார்" – நீதிமன்றத்தில் பி. வில்சனின் வாதம்!

“விஜய்க்குப் பதிலடியாகவே மார்க்கண்டேயன் பேசினார்” – நீதிமன்றத்தில் பி. வில்சனின் வாதம்!

“விஜய்க்குப் பதிலடியாகவே மார்க்கண்டேயன் பேசினார்” – நீதிமன்றத்தில் பி. வில்சனின் வாதம்!

 

சென்னை: சிறை வைப்பதற்கான உத்தரவை எதிர்த்து விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, ​​”சட்டமன்றத்தைப் பூட்டிவிடுவோம் என்று கூறிய முதலமைச்சர் விஜய்க்குப் பதிலடியாகவே மார்க்கண்டேயன் பேசினாரே தவிர, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் அவர் பேசவில்லை” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

வழக்கம் மற்றும் கைது பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த ஜூலை 18-ஆம் தேதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. ஜி.வி. மார்க்கண்டேயன், தமிழக முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, ஜூலை 20-ஆம் தேதி அதிகாலை விளாத்திகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து மார்க்கண்டேயனை காவல்துறையினர் கைது செய்தனர்.

பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்; அங்கு மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு நீதிபதி சுமதி முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்; அவரை ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தில் மனு

முன்னதாக, மார்க்கண்டேயன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதைத் தொடர்ந்து, சிறை வைக்கும் உத்தரவை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ​​எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் வாதிட்டதாவது:

“சட்டமன்றத்தைப் பூட்டிவிடுவோம் என்று முதலமைச்சர் கூறிய கருத்துக்குப் பதிலடியாகவே மார்க்கண்டேயன் பேசினார். கைதுக்கான காரணங்களைத் தெரிவிக்காதது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என்பதால், மனுதாரரை நீதிமன்றக் காவலில் வைக்க தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.

கைது செய்வதற்கு முன்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அத்தகைய அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை. ஜூலை 18-ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக, ஜூலை 19-ஆம் தேதி நள்ளிரவில் புகார் அளிக்கப்பட்டு, ஜூலை 20-ஆம் தேதி அதிகாலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதே நாளில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. எந்தவிதமான ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கம் எதுவும் அவருக்கு இருக்கவில்லை.”

இன்று மீண்டும் விசாரணை

வாதங்கள் முழுமையடையாத நிலையில், நீதிபதி இளந்திரையன் விசாரணையை ஒத்திவைத்தார். அதன்படி, இவ்வழக்கு இன்று (ஜூலை 28) மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments