சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுக்க ஸ்பெயினின் அதிரடி! கடலில் 500 மீட்டர் மிதக்கும் தடுப்புச் சுவர் அமைப்பு!
மாட்ரிட்: வட ஆப்பிரிக்காவில் உள்ள ஸ்பெயினின் தன்னாட்சிப் பகுதியான சியூட்டாவில் (Ceuta) ஆயிரக்கணக்கானோர் எல்லையை மீறி நுழைய முயன்றதைத் தொடர்ந்து, கடல் வழியிலான சட்டவிரோத ஊடுருவலைத் தடுக்க 500 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் தடுப்பை ஸ்பெயின் அரசாங்கம் அமைத்துள்ளது.
எல்லையில் திரண்ட பல்லாயிரக்கணக்கானோர்: மொராக்கோவை ஒட்டியுள்ள சியூட்டா எல்லைப் பகுதி வழியாக ஒரே நேரத்தில் சுமார் 50,000 முதல் 60,000 பேர் வரை ஸ்பெயினுக்குள் நுழைய முயன்றனர். இந்தத் திடீர் ஊடுருவலின் போது ஏற்பட்ட நெரிசலிலும், நீரில் மூழ்கியும் குறைந்தது 67 பேர் உயிரிழந்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் ராணுவம் உடனடியாகக் களமிறக்கப்பட்டு எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும் பரபரப்பு: இந்தச் சம்பவம் குறித்து ஸ்பெயின் உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா தெரிவிக்கையில், சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மொராக்கோ அரசுடன் இணைந்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.
அதேவேளையில், சட்டவிரோதக் குடியேற்றம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் கூறி இத்தாலி, ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட 22 உறுப்பு நாடுகள் அவசரக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியுள்ளன.
உணவின்றித் தவிக்கும் மக்கள்: ஸ்பெயின் எல்லைக்குள் நுழைய முயன்ற நூற்றுக்கணக்கானோர், அடிப்படை வசதிகளும் உணவும் கிடைக்காமல் சியூட்டாவின் காட்டுப்பகுதிகளில் தவித்த நிலையில், மீண்டும் மொராக்கோவிற்கே திரும்பத் தொடங்கியுள்ளனர். எனினும், சிலர் அங்கேயே தங்குவதில் தீவிரமாக உள்ளனர்.
