அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது..!
சென்னை | பிப். 14:
வடசென்னை மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) சார்பில், பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்குத் தயாராகும் மாணவ-மாணவியரின் எதிர்கால நலன் கருதி, ‘EPS – Explore, Plan, Succeed’ என்ற பிரம்மாண்ட தொழிற்கல்வி வழிகாட்டுதல் முகாம் இன்று நடைபெற்றது.
ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி, 39-வது வட்டத்திற்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெற்றது. வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பி. வினோத்குமார் முன்னிலை வகித்து, முகாமினைத் தொடங்கி வைத்தார்.
முகாமில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்
மாணவர்களுடன் கலந்துரையாடிய பேசிய போது:-
“மாணவர்களே, பிளஸ்-2 என்பது வெறும் பள்ளிப் படிப்பின் முடிவு அல்ல; அது உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தொடக்கப் புள்ளி. இன்றைய காலகட்டத்தில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு இருக்கும் குழப்பங்களைப் போக்கவே அதிமுக ஐடி விங் இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
வெறும் பட்டப்படிப்போடு நின்றுவிடாமல், உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது முன்னிலையில் இருக்கும் நவீன தொழில்நுட்பப் படிப்புகளில் (Emerging Courses) கவனம் செலுத்துங்கள். தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாகிய நீங்கள், சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தால் தான் ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற நமது இலக்கு முழுமையடையும். உங்கள் கனவுகள் நனவாக அதிமுக எப்போதும் ஒரு ஏணியாகத் துணை நிற்கும்.”
மேலும், கடந்த பத்தாண்டுகளாக அண்ணா தி.மு.க ஆட்சியில் மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட மகத்தான திட்டங்களை நினைவு கூர்ந்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக மகத்தான வெற்றி பெற்று, ஆர்.கே.நகர் தொகுதியில் பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்” என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளைச் சார்ந்த கல்வி வல்லுநர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக:
பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள்.
தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பப் படிப்புகள் (Emerging Courses) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு, கழகத்தின் கொள்கை முழக்கமான “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் நேதாஜி கணேசன், எம்.ஏ.சேவியர், சந்தனசிவா, லட்சுமி, ஏ.கணேசன், டி.டி.ஜனார்த்தனன், பி.ஜெகன், நாகரத்தினம் ரவிராஜன், முகேஷ், கே.பி.கர்ணன், ஆர்.சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி, மாலா, நிர்மல்குமார், இளவரசன், டி.பிரபாகரன், பிரியா அருள், கல்பனா உள்ளிட்ட பகுதி, வட்ட மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



