மமதாவுக்கு 48 மணி நேரத்தில் விழுந்த 5 இடி! மொத்தமாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? யூசுப் பதான் உட்பட 20 எம்.பி.க்கள் அதிரடி கிளர்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்கத் தேர்தலில் ஏற்பட்ட அதிர்ச்சித் தோல்விக்குப் பிறகு, முதலமைச்சர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சி தனது வரலாற்றிலேயே மிகக் கடுமையான காலகட்டத்தைச் சந்தித்து வருகிறது. உட்கட்சிப் பூசல், எம்பிக்களின் தொடர் ராஜினாமா மற்றும் கட்சித் தலைமைக்கு எதிரான கிளர்ச்சி என கடந்த 48 மணி நேரத்தில் நிகழ்ந்த 5 அதிர்ச்சிகரமான அரசியல் மாற்றங்கள், கட்சியின் இருத்தலையே தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளன.
மமதா பானர்ஜிக்கு நாலாபுறமிருந்தும் பெருகி வரும் அந்த 5 முக்கியச் சிக்கல்களின் முழு விபரம் இதோ:
1. நெருக்கடியை முதன்முறையாக ஒப்புக்கொண்ட மூத்த தலைவர்:
திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவரும், மமதா பானர்ஜியின் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவருமான சௌகதா ராய், கட்சி தற்போது கடுமையான அரசியல் நெருக்கடியில் இருப்பதை முதன்முறையாகப் பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜகைவ எதிர்கொள்ள எதிர்க்கட்சியின் பலத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், அதற்குச் சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியுடனான ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், கட்சி உறுப்பினர்களின் குறைகளைக் கேட்குமாறும், குறிப்பாக மமதாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக எழுப்பப்பட்ட புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறும் மமதாவை அவர் வலியுறுத்தியுள்ளது கட்சிக்குள் நிலவும் பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
2. காங்கிரஸ் – திரிணாமுல் ரகசிய இணைப்பு ஊகங்கள்:
டெல்லியில் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு முக்கியச் சந்திப்புகள் தேசிய அரசியலில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். இதற்கு முன்னதாக, மமதா பானர்ஜி சோனியா காந்தியைச் சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்புகள் காரணமாகத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது காங்கிரஸுடன் இணையவோ அல்லது முறையான கூட்டணியை அமைக்கவோ திட்டமிட்டுள்ளதாக ஊகங்கள் எழுந்தன. “இணைப்பு அல்லது கூட்டணி சாத்தியமாகலாம்” என்று சௌகதா ராய் கூறியது இந்த ஊகங்களுக்கு மேலும் வலுசேர்த்தது. இருப்பினும், இரு தரப்பும் இதனை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளதுடன், இவை வெறும் வதந்திகள் மட்டுமே எனக் கூறியுள்ளனர்.

3. யூசுப் பதான் உட்பட 20 எம்.பி.க்கள் அதிரடிக் கிளர்ச்சி!
மமதா பானர்ஜிக்கு விழுந்த இடிகளிலேயே மிக அசுரத்தனமானது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கிளர்ச்சிதான். திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த சுமார் 20 மக்களவை (Lok Sabha) எம்.பி.க்கள் மமதாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, நாடாளுமன்றத்தில் தங்களைத் தனிப் பிரிவாக (Splinter Group) அங்கீகரிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளனர்.
கட்சித் தாவல் தடையிலிருந்து தப்பிக்க வியூகம்: இந்தக் கிளர்ச்சியாளர்கள் குழுவில் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மற்றும் முக்கியப் பிரமுகரான சயோனி கோஷ் ஆகியோரும் அடங்குவர். கடுமையான கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் (Anti-defection law) நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் (2/3rd majority) ஆதரவு தேவைப்படுகிறது. தற்போது கிளர்ச்சி செய்துள்ள இந்தத் தரப்பினரிடம் அதற்கான போதிய எம்.பி.க்களின் எண்ணிக்கை உள்ளதாகத் தெரிகிறது.
4. 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா:
கடந்த சில நாட்களிலேயே, திரிணாமுல் காங்கிரஸின் மூன்று முக்கிய மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினர்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். மூத்த தலைவர்களான சுகேந்து சேகர் ராய் மற்றும் சுஷ்மிதா தேவ் ஆகியோரைத் தொடர்ந்து, பிரகாஷ் சிக் பாரைக் தனது பதவியை வியாழக்கிழமையன்று ராஜினாமா செய்தார். மேற்கு வங்கத்தில் ஒட்டுமொத்த அரசியல் சூழலும் தற்போது பாஜகவுக்குச் சாதகமாக மாறியுள்ளதாக பாரைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்தத் தொடர்ச்சியான வெளியேற்றம் டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸின் பலத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
5. வில்லனாக மாறும் மருமகன் அபிஷேக் பானர்ஜி?
இந்த ஒட்டுமொத்த அரசியல் கொந்தளிப்பிற்கும், உட்கட்சிப் பூசலுக்கும் மையக் காரணமாக இருப்பது மமதா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜி மீதான கடுமையான அதிருப்திதான். கட்சியின் அனைத்து அதிகாரங்களும் அவர் ஒருவரின் வசமே குவிந்துள்ளதாக மூத்த தலைவர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
அபிஷேக் பானர்ஜி மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டுகள்:
1. கட்சியின் மூத்த முன்னோடித் தலைவர்களை திட்டமிட்டு ஓரங்கட்டுவது.
2. கட்சியின் மூத்த நிர்வாகிகளைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது.
3. அபிஷேக் பானர்ஜியின் ஆதரவாளர்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் இடையே நிலவும் வெளிப்படையான மோதல்.
பல முக்கியத் தலைவர்கள் தங்களை மதிக்காத காரணத்தினாலேயே கட்சியை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தற்போது சந்திக்கவிருக்கும் இந்த இமாலயப் பிளவை மமதா பானர்ஜி தனது வழக்கமான இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவாரா அல்லது கட்சி வரலாற்றில் இல்லாத உடைவைச் சந்திக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



